Wednesday, August 13, 2008

453. சென்னையின் நாதியற்ற புராதானச் சின்னங்கள்

சென்னையின் புராதானச் சின்னங்களான பல ஆங்கிலேய காலத்துக் கட்டடங்கள் (Heritage buildings) பராமரிப்புக்கான சரியான அரசு திட்டம் இல்லாததால், நாதியற்று சீரழிந்து சிதிலமடைந்து (அல்லது இடிக்கப்பட்டு!) வருகின்றன. சென்னையில் 200-க்கும் மேற்பட்ட (100 ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்க) வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்கள் இருந்தும், இவற்றைப் பாதுகாக்க சட்டம் (Heritage act) எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் சில மக்கட் போராட்டத்தால் காப்பற்றப்பட்டிருப்பினும், அவற்றை பாதுகாப்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை :( சென்னை தனது வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களை (கேட்பார் / கவனிப்பார் அற்று) கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

1. கோகலே கூடம்: 94 வருடங்கள் பழமையான இதன் உட்பகுதிகள், நீதிமன்றத்தின் தடை (இன்று) வருவதற்கு முன்பாகவே, இடிக்கப்பட்டு விட்டன. YMIA-இல் உள்ள சிலரது பண ஆசைக்கு இது பலியாகி விட்டது. பெசண்ட் நினைவுக் கட்டடம் (Besant Memorial Building) என்றும் அழைக்கப்படும் இது ஆர்மேனியன் தெருவில் உள்ளது. இந்த இடத்திலிருந்து தான் அன்னி பெசண்ட் அம்மையார் சுயாட்சிக்கான போராட்டத்தை தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "விழித்தெழு இந்தியா" என்ற தலைப்பில் வரலாற்று சிறப்பு மிக்க தொடர் உரைகளை அன்னி பெசண்ட் அம்மையார் இதே கூடத்திலிருந்து தான் நிகழ்த்தினார்!

இது 30000 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று மாடிக் கட்டடம் இது. 1916-இல் இவ்விடத்தில் சுயாட்சி லீக் தொடங்கப்பட்டது. கோகலே கூடத்தில் மகாத்மா காந்தி, தாகூர், சத்தியமூர்த்தி போன்றோர் பிரசித்தி பெற்ற எழுச்சி உரைகளை ந்கழ்த்தியுள்ளனர். அன்னி பெசண்ட் அம்மையார் 'மதராஸ் பாராளுமன்றம்' (Madras Parliament) என்ற இயக்கத்தைத் தொடங்கினார். அவ்வியக்கமே, VK கிருஷ்ணமேனன், KC ரெட்டி (கர்னாடகாவின் முதல் முதல்வர்), R வெங்கட்ராமன் போன்றோருக்கு பயிற்சிக்களமாக விளங்கியது.

அது போலவே, 1940, 1950களில் பிரசித்தி பெற்ற கர்னாடக இசை மேதைகளான முசிரி சுப்ரமணிய ஐயர், அரியகுடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி ஐயர், ராஜரத்தினம் பிள்ளை, GN பாலசுப்ரமணியம், KP சுந்தராம்பாள், DK பட்டம்மாள் போன்றொர் இங்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

இப்போது அதன் புராதனத்தன்மை குன்றா வண்ணம், அதன் வெளிப்புறத்தையாவது சீரமைக்க முடியுமா என்று YMIA-வில் நல்லவர் யாராவது யோசிப்பார் என்று நம்புவோம் !

இந்திய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையதும், பாரம்பரியச் சிறப்பு மிக்கதுமானவற்றின் மீது கூட அக்கறை இல்லாத நாமெல்லாம் உருப்படுவோமா ? :(

2. அட்மிரால்டி ஹவுஸ்: சட்டமன்ற உறுப்பினர் விடுதி அமைந்துள்ள அரசு எஸ்டேட் வளாகத்தில் இருக்கும், 208 வருட பாரம்பரியமிக்க இந்த கட்டடத்தை, அரசு மனது வைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அடிப்படை பராமரிப்பு கூட இல்லாமல் சீரழிந்து போய் இடிந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்ட இக்கட்டடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. அவ்விடத்தில், ரூ.200 கோடி செலவில் சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது.

3. காவல் தலைமையகம், மெரினா: INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) என்ற அமைப்பும், சில புராதான ஆர்வலர்களும் சேர்ந்து நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கியதால், ஆங்கிலேயக் கட்டடக் கலையின் (Colonial Architecture) சிறப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தும், 70 வருட பழமையான இக்கட்டடம், இடிக்கப்படுவதிலிருந்து தப்பித்தது. 1996-இல் புதுப்பிக்கப்பட்டது.

4. ராணி மேரிக் கல்லூரி, மெரினா: 110 ஆண்டுகள் பழமையான இவ்வளாகக் கட்டடங்களை இடித்து விட்டு அங்கு புத்தம்புது சட்டமன்ற வளாகம் அமைக்க அப்போதைய முதல்வர் ஜெ தீட்டிய திட்டம் ஆசிரியர்-மாணவி கூட்டணியின் போராட்டத்தால் கைவிடப்பட்டது. கடற்கரைப் பகுதியில் உள்ள கட்டடங்களை இடிப்பதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற்றாக வேண்டிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் TR.பாலு ஜெயலலிதாவை தோற்கடிப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்றாலும், இந்த புராதானச் சின்னம் காப்பாற்றப்பட்டதில் பலருக்கும் மகிழ்ச்சியே.

5. பாரத் இன்சூரன்ஸ் கட்டடம், அண்ணா சாலை: 1897-இல் "கார்டில் பில்டிங்" என்ற பெயரில் கட்டப்பட்ட இது, இந்தோ-சரசெனிக் கட்டடக்கலைக்கு (Indo-Saracenic architecture) ஓர் அற்புதமான வரலாற்றுச் சான்றாக, இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இதன் உரிமையாளரான LIC நிறுவனம், ஆகஸ்ட் 2006-இல் (பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் செலவு அதிகமாகிறது என்ற காரணத்துடன்!) இதை இடிக்க முற்பட்டபோது, INTACH நீதிமன்றம் சென்று இடிப்பதை தடுத்து நிறுத்தியது. தற்போது இக்கட்டடம், கொஞ்சம் கொஞ்சமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

உங்களுக்காக, இன்னும் சில புராதானச் சின்னங்களின் புகைப்படங்கள்:

விவேகானந்தர் இல்லம் (1842)


ரிப்பன் கட்டடம் (1913)


சாந்தோம் சர்ச் (பதினாறாம் நூற்றாண்டு)


தியோசாபிகல் ஸொஸைடி (அடையாறு)


செனேட் இல்லம் (1874, சென்னைப் பல்கலைக்கழக வளாகம்)

எ.அ.பாலா

சில புகைப்படங்களுக்கு நன்றி:
http://timkarolsvoboda.blogspot.com
http://flickr.com/photos/bratboy76/

Friday, August 08, 2008

452. அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்து விட்டது!

எனது இந்தப் பதிவில் இட்ட வேண்டுகோளின் தொடர்ச்சியாக நமது தமிழிணைய நல்ல உள்ளங்களின் ஆதரவோடு திரட்டிய தொகையைக் கொண்டு வாங்கிய (பாட்டரியால் இயங்கும்) சக்கர நாற்காலி நேற்று நண்பர் அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தானியங்கி சக்கர நாற்காலியின் வாயிலாக அவரால் தானாகவே வெளியிடங்களுக்குச் சென்று வர இயலும். ஒரு முறை பாட்டரியை சார்ஜ் செய்தால், 7 கி.மீ வரை பிரயாணிக்க இயலும். அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்பது அவர் என்னிடம் தொலைபேசியதிலிருந்தே தெரிந்தது!

இந்த சமயத்தில் பொருளுதவி செய்த அன்பு நண்பர்களுக்கும், அந்தோணியை வாழ்த்திய அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இதற்கு முன்னால், அந்தோணிக்கு நமது கூட்டு முயற்சியின் வாயிலாக ஒரு மடிக்கணினி வாங்கித் தரப்பட்டது. அது தொடர்பான எனது பதிவையும் வாசிக்கவும். இதன் வாயிலாக, அந்தோணி வீட்டிலிருந்தபடியே கணினி சார்ந்த பணி ஒன்றை மேற்கொண்டு (working from home) தன் தேவைகளுக்கு வேண்டிய பணத்தை சம்பாதிக்க முடிகிறது.

உங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் அந்தோணி மென்மேலும் வளர்வதற்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் !

அந்தோணியின் தமிழ் வலையகம் இது

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, August 02, 2008

451. தமிழ் வலைப்பதிவுகளில் முதன்முறையாக - இட்லிவடையை முந்திய பாலா

ரஜினியின் சுயநலம்-சரத்குமார், தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்

சென்னை: தனது படம் கர்நாடகத்தில் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டுள்ளது அவரது சுய நலத்தையே வெளிப்படுத்துகிறது என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

குசேலன் படம் கர்நாடகத்தில் சிக்கல் இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக கன்னட அமைப்புகளிடம், தான் ஓகனேக்கல் விவகாரம் குறித்து சென்னையில் பேசியது தவறு, இனிமேல் அப்படிப் பேச மாட்டேன், பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று நேரடியாக மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் வருத்தம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி சுயநலமாக பேசியுள்ளார் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தான் பேசியது தவறு என்று ரஜினி கூறியுள்ளார். அவர் இங்குதான் வளர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவிப்பதாக ரஜினி கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று.

தனது படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினி வருத்தம் தெரிவித்திருந்தால் அது நிச்சயம் சுய நலம்தான். இது தவறான பேச்சு என்றார் சரத்குமார்.

தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்:

ரஜினியின் வருத்தம் குறித்து சத்யராஜ் கருத்து தெரிவிக்கையில், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார்.

என்னை பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக் கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன் என்றார்.

பரந்த மனப்பான்மை-பாரதிராஜா:

இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்றார்.

நியாயம்தான்-கலைப்புலி சேகரன்:

தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் கூறுகையில், தனிப்பட்ட முறையிலோ, தனி மனிதராகவோ அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொழில் ரீதியாக அவர் வருத்தம் தெரிவித்திருப்பதில் நியாயம் உள்ளது. இதைக் கண்டிப்பது சரியல்ல என்றார்.


இந்து மக்கள் கட்சி கண்டனம்:

இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,

ஒகேனக்கல் குடிநீர் பிரச்சினைக்காக தமிழ் திரைப்படத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிக உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை உசுப்பேற்றி பரபரப்பு செய்தியாக்கினார்.

ஆனால் இன்றோ தனது குசேலன் படத்துக்கு கர்நாடகத்தில் ஒரு சில கன்னட வெறியர்களால் மிரட்டல் ஏற்பட்டு அதனால் திரையிட முடியாமல் போய் விடுவோ என்ற அச்சத்தில் கர்நாடக மக்கள் தனக்கு பாடம் புகட்டி விட்டார்கள். இனிமேல் அதுபோல் பேச மாட்டேன் என்று தார்மீக மன்னிப்பு கேட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவமானப்படுத்தக் கூடிய செயலாகும்.

தமிழக மக்களையும், இளைஞர்களையும் தனது ரசிகர்களாக கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த ரஜினி தான் ஒரு கன்னடர் என்பதை நிரூபித்துள்ளார்.

தனது திரைப்படத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் அவர் சொன்னதில்லை. வியாபாரரீதியாக திரைப்படத்தில் வாங்கும் சம்பளம் ரூ.20 கோடிக்கு நஷ்டம் வந்து விடுவோ என்று அவர் அச்சப்படுகிறார்.

உண்ணாவிரதத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ஆவேசமாக கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்களை திரும்பப் பெற ரஜினிகாந்த் வாய் சொல்லில் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

எனவே அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். தான் சம்பாதித்த வியாபார தளமாக தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்துக்கு இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி: தட்ஸ்டாமில்.காம் வலைத்தளம்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails